Monday, May 21, 2012

ஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் - பொருளியல் ஆய்வாளர் சீற்றம்


அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


ஹிலாரி கிளின்டனுடன் நடத்திய பேச்சுக்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, நாட்டின் ஏனைய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாககு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். 


இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொருளியல் ஆய்வாளரான முத்துக்கிருஸ்ண சர்வானந்தா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கருத்து புள்ளிவிபர தகவல்களை திரிபுபடுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாய வழிமுறையாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 


“ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பின் போது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு சில புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான தகவல்களையும், வடமாகாணத்தை பொறுத்தவரையில் வேறு சில புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான தகவல்களையும் அவர் வழங்கியுள்ளார். 


சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 2010ம் ஆண்டு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது உண்மைதான்.


என்றாலும், இது புது விடயம் அல்ல. போர்நிறுத்த காலத்தில் கூட இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது. 


ஆனால் போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்ட அந்த பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை. 


அதேபோல் வடமாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சி தொடருமா என்பதும் கேள்விக்குறியே. 


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதில் சற்றுக் கள்ளத்தனம் இருப்பதாக தான் கருதுகிறேன்.


அரசியல் விவகாரங்கள் மற்றும் மனிதஉரிமை விபரங்களை திரிபுபடுத்திக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் பரப்புரை உத்தியாகவே பீரிசின் கருத்துக்கள் உள்ளன. 


சிறிலங்கா அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று பரப்புரை செய்து வருகிறது.


அதற்காக வெளிநாடுகளிடமிருந்தும் உதவிகளை வெளிப்படையாக கேட்டு வருகிறது.


அதனை ஆதரிக்கும் வகையில் இப்படியாக திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டு அவர்களை தவறான வழியில் நம்ப வைக்கும் நடைமுறையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 


இதே கருத்தையே ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment